வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி I V | கமலநாதன் பத்திநாதன்

இலங்கைத் தீவின்  பூர்வீக குடிகளாக சிங்களவர்களையும்  மற்றும் தமிழர்களையும்  அவர் தம் பேரினவாத சிந்தனையானது,  பல வரலாற்று புனைவுகளின் ஊடாக இற்றை வரை  தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால்  இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் வேடுவர் என்பதை எவரும் மறுக்கவியலாது. அதனடிப்படையில், கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் இருப்பியல் பற்றியும், அவர் தம் தேவை பற்றியும் ‘வேடர் மானிடவியல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் ஆய்வுப்பாங்கில் விவரிக்கின்றது. வேடுவர்களுக்கே உரித்தான அடையாளங்களை வெளிக்கொணர்வதாகவும், இதுவரை நாம் அறிந்திடாத வேடுவர் குணமாக்கல் சடங்குகள், இயற்கையுடன்  பின்னிப்பிணைந்த அவர்களின் வாழ்வியல், வேடுவர் மீதான ஆதிக்க சாதியினரின் பாகுபாடுகள் என்பன உள்ளிருந்து மரபு மீட்கும் நோக்கில் பிரதானமாகக் கண்டறியப்பட்டு, அவை தொடரின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் காலனிய எண்ண மேலாதிக்கத்துள் சிக்குண்டு அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர் தம் மானுட நகர்வுகள் முதலான பல அல்லோல கல்லோல நிலைமைகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன.

வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் (Worship healers)

வழிபாடுகள் வேண்டுதல்களின் மூலம் குணமாக்கல் வேலைகளைச் செய்கின்றவர்களான பூசாரிமார், மந்திரவாதிகள், கப்புறாளைமார் (வேடமரபில்), கலையாடுவோர், பரியாரிமார், பாதிரிமார்கள், மௌலவிகள், பிக்குமார்கள் போன்ற வழிபாட்டு மூலதாரர்கள் சமய வழிபாடு, சமூக நடத்தைகளில் தாம் கண்ட அனுபவங்கள், உளவியல் சார் நடத்தைக் கோல வழிகளை அறிந்தோ, அறியாமலோ தம்மை நாடி வருகின்ற மக்களுக்கு உதவியளிப்பவர்களாக, பல காலங்களாகத் தாம் தமது குருவிடம் இருந்து கொண்டு கற்ற அனுபவங்களைப் பயன்படுத்தி, மனித உளச்சிக்கல் பிரச்சினைகளைக் குணமாக்குவதில் பெயர் பெற்று விளங்குகின்றார்கள்.

இவர்கள் கடவுளருக்கு அபிஷேகம் செய்தல், அர்ச்சனை போடுதல் போன்ற கிரியைகளைச் செய்து விபூதி, சந்தனம், தீர்த்தம், பூ போன்ற பிரசாதங்களைக் கொடுத்து ஆசீர்வதிக்கின்றனர். இவை தவிர விபூதி போடல் நூல் கட்டுதல், நீர் ஓதிக் கொடுத்தல் போன்றவைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்கள் மந்திர உச்சாடனங்கள், வேதம் ஓதல் சாந்தி செய்தல் முதலிய வழிபாட்டு முறைகளைச் செய்தும் பாதிப்புற்ற மக்கள் தமது இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு செல்வதற்கு உறுதுணையாகச் செயற்படுகின்றார்கள். இதுபோலவே பாதிரிமார்கள் பூசைகள் செய்தும் திருப்பலி கொடுத்தும் நீர் ஓதிக் கொடுத்தும் ஆசீர்வாதப் பெருவிழா விடுதலைப் பெருவிழா உயிர்ப்பித்தல் நிகழ்வுகள் போன்ற தமது சமய ஆசாரங்களின் மூலம் பாதிப்புற்ற மக்களுக்கு உதவுகின்றார்கள். முக்கியமாக கிறிஸ்தவ மக்கள் தனிப்பட்ட ரீதியாக தமது பிரச்சினைகளை உணர்ச்சிகளை குற்றவுணர்வுகளைப் பாவ மன்னிப்பு என்னும் ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறான நடைமுறைகளின் மூலம் குணப்படுத்தும் திறன் பெற்றவர்களாக வழிபாட்டினூடே குணப்படுத்துவோர் பாரம்பரிய வழிபாட்டு மரபிலே மிகையாகவே விளங்குகின்றார்கள் எனலாம்.

இவர்கள் பல நற்கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். தம்மை நாடி வரும் நோயாளர்களைத் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாதிருத்தல் ,அவர்களிடமிருந்து அதிக பணத்தையோ (நோயாளர்கள் விரும்பிய சன்மானத்தினைக் கொடுக்கலாம்) வேறு எந்தப் பொருட்களையும் அறவிடாது இருத்தல், தமது குணப்படுத்தும் அறிவினை மற்றவர்களை வசப்படுத்தவோ தமது செல்வாக்கை பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கோ பயன்படுத்தாது இருத்தல் போன்ற பல நல்ல ஒழுக்கக் கோட்பாடுகளினைக் கடைப்பிடிப்பவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வகையாகக் குணமாக்கலினைச் செய்யும் அநேகர் பரம்பரை பரம்பரையாக சிறப்பான வழிகளில் பயிற்சி பெற்றுத் தத்தமது திறன்களை விருத்தி செய்து கொண்டவர்களாக இருப்பர். உதாரணமாக சிலர் சிறுவர்களின் நோய்களைக் குணப்படுத்துவதில் பெயர் பெற்றவர்களாக இருப்பர். இன்னும் ஒருசாரார் செய்வினை, சூனியம் முதலியவற்றால் ஏற்படுவதாக நம்பப்படும் (Sorcery) தீவினைகளை அகற்றுபவர்களாக இருப்பர். அநேகமான பரியாரிமார் மருந்து, மூலிகைச் செடிகளைச் சேகரித்து, மருந்துகளைத் தாமே தயாரித்து அவற்றின் மூலம் மருத்துவம் செய்வதில் சிறந்து விளங்குகின்றனர்.

கிறிஸ்தவப் பாதிரிமார்களின் வழிபாட்டின் ஊடான குணமாக்கல் முறைகளும் நோக்க வேண்டியதே. உதாரணமாக விடுதலைப் பெருவிழா போன்ற குணமாக்கல் வழிபாட்டு முறைகளானது அங்கே மலிந்து காணப்படும். அவ்வாறான ஆராதனை நிகழ்வின் போது ஆயிரக்கணக்கானவர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி குறிப்பிட்ட நோயாளிக்காக (உடலுளம் சார்ந்த எந்த நோயாக இருப்பினும்) தமது மனவாற்றலைக் கொண்டு வேண்டிக் கொள்கின்றனர். இத்தருணம் பல்லாயிரக்கணக்கான மனித மன ஆற்றலானது ஒருவருக்காக ஒன்று சேரும் போது அங்கு பாதிக்கப்பட்டவர் உண்மையாகவே அதிசயமாகக் குணமடைந்து விடுகின்றார். இத்தன்மை கொண்ட வழிபாட்டினை நெறிப்படுத்தும் வேலையினைச் செய்பவர்களாகவே பாதிரிமார்கள் காணப்படுகின்றனர். கடவுளென்னும் எண்ணப் பொருள் உண்டோ இல்லையோ அவ்வாறான விடயப் பொருளினை துணையாகக் கொண்டு நடைபெறுகின்ற வேண்டுதல்களினால் அபரிமிதமான குணப்படுத்தல் வேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

கலையாடுவோர்- பேயாடுவோர் (மட்டக்களப்பு வழக்கில்)

கலையாடுபவர்களை உருவாடுபவர்கள், பேயாடுபவர்கள், தெய்வமாடுபவரகள், சாமியாடுபவர்கள் மற்றும் சன்னதம் ஆடுபவர்கள் என்றும் அழைப்பர். கலையாடுபவர்களில் பலர், கலையாடத் தொடங்கும் முன் ஆழமான உளசமூகத் தாக்கங்களுக்கு ஆளாகித் தேறியவர்களாக இருப்பர். பொதுவாக சாமி ஆடுபவர்கள் முதலில் அதற்கான தயாரிப்புப் படிமுறைகள் பூசை போன்றவற்றைச் செய்துவிட்டு, சடங்கு வழிபாட்டிற்கு வந்திருப்பவர்களின் முன்னே வந்து, தன்னுணர்வை இழந்து, வேறு ஒரு சக்தியின் துணையுடன் அநேகமான சந்தர்ப்பங்களில் காளி அம்மன், வைரவர் பரிசுத்த ஆவி போன்றதான ஏதாவது ஒரு கடவுளின் கட்டுப்பாட்டில் இயங்கி, உருக்கொண்டு ஆடுகிறார். அவரின் குரலில் மாற்றம் ஏற்பட்டு, உறுதியான குரலில், ஆணித்தரமாகப் பேசத்தொடங்குவார். மக்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்கள் கேட்பவற்றிற்குப் பதில் சொல்வார். இவ்வாறு கலையாடுபவர்கள் குறித்த சடங்கிற்கான வழிபாட்டுச் சக்தியினைப் பெற்றவராக அங்கு காணப்படுவார்.

அவ்வாறு அதிமானுட நிலைக்குச் சென்றவர்களினை மக்கள் தம்மைக் காக்கின்ற பாதுகாப்பு சக்தி என நம்பி, அவரிடம் தமது குறைகளைக் கொட்டித் தீர்த்து, தாம் வணங்கும் கடவுளருடன் ஒட்டி உறவாடும் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்நடவடிக்கைகளே உடலுளப் பிணியோடு சென்றவர்களுக்கு ஆரம்ப கட்ட குணமாக்கல் விளைவினைக் கொடுத்து விடும். அங்கு இன்னும் பல நிகழ்வுகளும் நடந்தேறும். தெய்வ உருவேறியவரைச் சூழ பக்தர்கள் காணப்படுவர். அச்சமயம் அக்கலையாடுபவர் ஒவ்வொருவராக தண்ணீர் தெளித்து தம்மிடம் அழைத்து அவர்களின் குறைகளினைக் கேட்டு அதற்கான பரிகாரங்களினையும், நிவர்த்திகளினையும் சொல்லிக் குணமாக்குபவராகக் காணப்படுவார். தெய்வம் உருப்பெற்றவரே தம்மைக் கூப்பிட்டு வாக்குகள் சொன்னால் அது மிகப் பெரிய விடயமாக மக்களுக்கு அமைந்து விடுகின்றது. அதிகமான மக்கள் இவ்விதமான கலை ஆடுபவர்களை நாடி தமது குறைகளையும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும், ஏனைய குடும்ப மற்றும் சமூகப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முனைகின்றார்கள். கலை ஆடுபவர்கள் இத்தகையவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுகின்றார்கள். அத்துடன், இப்படியான நிகழ்வுகளில் மக்களுக்குத் தமது பிரச்சினைகளைச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒர் ஆதரவான சூழலில் வெளிக்கொண்டுவரவும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.

வாக்குச் சொல்லல் (கட்டுச் சொல்லல்)

மேலே கலையாடுபவர்கள் பகுதியில் குறிப்பிடப்பட்ட நடைமுறையோடு தொடர்புடைய குணமாக்கல் முறையின் அடுத்த கட்ட முன்னெடுப்பாகவே வாக்குச் சொல்லல் என்பது காணப்படுகின்றது. உருக்கொண்டு ஆடுபவர்கள் தமது அதிமானுட சக்தியினை வாக்குச் சொல்லல் என்னும் உரையாடல் வெளிப்பாடாகவே வெளிப்படுத்துகின்றனர். பல்வகையான குறைகளுடனும், உடலுளப் பிரச்சினைகளுடனும் வருகின்றவர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் வேண்டுகோளினைச் செவிமெடுத்து அதற்கான தீர்வினையும், ஆலோசனைகளினையும் கூறுவார்கள். இது ஒரு ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டுடன் தொடர்புடையதாகக் காணப்படும். மக்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளான பெறுமதியான பொருட்கள் தொலைதல், களவு போதல், வளர்த்த மிருகங்கள் காணாமல் போதல், தனிநபர் குடும்பப் பிரச்சினை மற்றும் தொழில் தொடர்பாக, திருமணம் தொடர்பாக தீர்வுகாண முடியாதிருத்தல் போன்ற பலவகையான நிலைமைகளில் மனம் குழம்பிய படி வழிபாட்டுச் சடங்குகளில் பங்கு கொண்டு வாக்குக் கேட்டலில் ஈடுபடுவர். இதன் போது வாக்குச் சொல்பவர் தம்முள் உருக்கொண்ட சக்தியினை வெளிக்காட்டும் வண்ணம் உடல் பாவனைகள், குரல் வளம், அசாதாரண சைகைகள் மூலம் உரத்த தொனியில் பாதிக்கப்பட்டவருடன் உரையாடுவார்.

இங்கு மிக நுணுக்கமான குணப்படுத்தல் செயற்பாடுகள் வெளிப்படுவதைக் காண முடியும். அதாவது பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வாக்கும் சொல்லும் போது அவர் சார்ந்த குடும்பப் பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகளினையும் வாக்குச் சொல்பவர் கூறுவார். உதாரணமாக குடும்பத்தவர் ஒருவரின் ஏதாவது உடமைகள் காணாமல் போன சந்தர்ப்பத்தில் அவர் வாக்குச் சொல்லலுக்கு உட்படுகின்ற வேளையில் பாதிக்கப்பட்டவர் ஆவேசத்தில் “இதற்கு யார் காரணம் அவரை நீ அடையாளம் காட்ட வேண்டும்” என்று தமது கடவுள் உருவேறப்பட்டவரை உரிமையாகவும், பகிரங்கமாகவும் கேட்பார் அப்போது உருவேற்றப்பட்டவர் “நான் யார் காரணம் என்று சொன்னால் நீ அவருடன் சண்டை சச்சரவுகளுடன் ஈடுபடுவாய் ஆகவே நான் யார் என்று கூறமாட்டேன்” என்று கூறி பாதிக்கப்பட்டவரை ஆசுவாசப் படுத்துவார். இவ்வேளை அதுவரை நேரமும் பழிவாங்கும் உணர்வுடன் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர் சாமியின் கட்டயை ஏற்று சாந்தமடைந்து விடுவார். இதுவோர் குணப்படுத்தல் உத்தியினதும் வழிபாட்டு குணமாக்கலினதும் பாரதூரமான நன்மை பயக்கும் நடைமுறை எனலாம். இவ்வாறான நடைமுறைகளில் வாக்குச் சொல்லுதல் மூலம் குணமாக்குவோர் சரியான நடைமுறைகளைக் கையாளவிடின் பாதிப்புற்றவர்கள் இன்னும் அதிகபட்சமான நோய்படு நிலைக்கு ஆளாகி விடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கதே.

பேயோட்டுவோர்(Exorcism)

பேயோட்டல் செயற்பாடு என்பது பேய்கள் அல்லது இதர ஆவிகள் என்று நம்பப்படுகின்றவற்றை ஒரு நபரிடமிருந்தோ அல்லது ஒரு இடத்திலிருந்தோ விரட்டும் நடவடிக்கை ஆகும். இப்பழக்கம் மிகப்பழமையானதாகும். இது பல் பண்பாடுகளின் வழிபாட்டு நம்பிக்கைகளின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது. தமிழர் கலாசாரத்தில் பேய்கள் பற்றிய நம்பிக்கைகள் நிறையவே இருக்கின்றன. பேய் பிடித்தல் பேய்க்குணம் பேயாடுதல் பேயோட்டுதல் எனப் பேய்களுடன் தொடர்புடைய சொற்பிரயோகங்களும் நடைமுறையுடன் கூடிய வழக்கங்களும் இருக்கின்றன. ஒருவரின் இயல்புக்கு மீறிய நடவடிக்கையினை அவதானிக்கும் சுற்றத்தோர் அவரை பேய் பிடித்து விட்டதாக நம்புகின்றனர். குறித்த அந்நபரின் உடல் இளைப்பினையும் முகப்பொலிவின்மையினையும் மற்றும் சில வழமைக்கு மாறான நடவடிக்கைகளினைப் பார்த்தும் ஒருவருக்கு பேய் பிடித்திருப்பதாக இவர்கள் ஓரளவு நம்பி விடுகின்றனர். ஆனால் என்ன பேய் பிடித்துள்ளது, ஏன் பிடித்துள்ளது என்பதனை அறிய மிகவும் பரிச்சயமும், அனுபவமும் கொண்ட பேயோட்டு வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் காணப்படுகின்றனர்.

சில உளநலத் தாக்கங்களுக்கு ஒருவரை அல்லது ஓர் இடத்தை பேய் பிடிப்பதுதான் காரணம் என்று கிராமப்புறங்களில் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இப்பேய்கள் ஆனது தமக்கு எதிரானவர்களினால், மந்திரவாதிகளினால் ஏவப்படுவதாக நம்பப்படுகின்றது. சாதாரண மனிதர்களின் பலவீனமான சந்தர்ப்பங்களாகக் கொள்ளப்படுகின்ற பல தருணங்களில், இடங்களில் ஒருவரை பேய்பிடித்துக் கொள்வதாகக் கருதப்படுகின்றது. அதாவது இரவு வேளைகளில் தனியே செல்லும் போது, பயங்கரமான அல்லது பிரச்சினைக்குரிய இடங்களுக்கு ஊடாகச் செல்லும் போது ( சுடலை, பாழடைந்த வீடுகள், முச்சந்திகள், கழிப்பு கொடுக்கப்பட்ட இடங்கள் போன்றன.) முதலியவற்றின் மூலம் ஒருவரில் பேய் இருப்புக் கொள்வதாக நம்பப்படுகின்றது. கிறிஸ்தவ வழிபாட்டு நடைமுறைகளிலும் இப்பேய்கள், ஆவிகளுடன் தொடர்புடைய வழிபாட்டுக் குணமாக்கல் நடைமுறையானது காணப்படுகின்றது.

பிரதேசத்திற்குப் பிரதேசம் வெவ்வேறான பெயர்களில் அழைக்கப்படும் பல்வேறுபட்ட பேய்கள் இருந்தாலும், பேயோட்டும் சடங்கானது அடிப்படையாகச் சில அம்சங்களைக் கொண்டிருக்கும். ஒரு விசேட பூசை நடக்கும். பேய்கள் ஆனது வாழ்வதாகக் கருதப்படும் இடங்களில் ஆறு, குளம், கடல் அல்லது சுடலையை அண்டிய பகுதிகளில் நடக்கும். பின்பு பேயோட்டுதல் ஆட்டிக் கழித்தல் என்னும் அமானுட சக்தியின் துணை கொண்டு நடைபெறும். இங்கு பேய் ஓட்டுபவர் பேய் பிடித்தவரை அதிமானுட நிலைக்குச் செல்ல வைத்து அவரில் வந்த நிற்கும் பேயுடன் உரையாடுவார். அச்சமயம் குறித்த நபரில் பிடித்திருக்கும் அந்தப் பேய் எது என்பதையும் அது என்ன காரணத்திற்காக அந்நபரில் வந்தது என்பதையும் பாதிக்கப்பட்ட நபரில் இருந்து செல்ல என்ன வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வார். அநேகமான சந்தர்ப்பங்களில் அந்த தேவை நிறைவேற்றப்படும்.


“பேய் பிடித்தவரிலிருந்து பேய் விலகிக்கொள்ளும், அவர் குணமடைவார் அல்லது முதற்காட்டிய அறிகுறிகளிலிருந்து விடுபடுவர். பேய்கள் கேட்கும் பொருட்கள் ஆழ் மனதில் நனவிலிப் பகுதியில் இருக்கும், பூர்த்தி செய்யப்படாத, ஆசைகளைப் பிரதிபலிக்கலாம் அல்லது ஆழ் மனதிலிருக்கும் உளச்சிக்கல்கள், தாக்கங்கள், இயக்கப்பாடுகளைக் குறிக்கலாம் என்று மேற்கத்தேய அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த நிகழ்வுகளில் அநேகமானவை சமூகமட்டப் பார்வையாளர் முன் அதாவது குடும்பத்தவர், சமூகம், சுற்றத்தார் என்பவர்கள் முன்னிலையிலேயே நாடகத் தன்மையோடு நடத்தப்படுவதனையும் குறிப்பிட்டாக வேண்டும். இதனால் சமூகமட்டப் பயன், ஆதரவு, மதிப்பு, இயக்கப்பாடு என்பன பாதிக்கப்பட்டவருக்குக் கிட்டுகிறது. இவ்வாறான கலாசார செயற்பாடுகளின் பயனாக தனிப்பட்ட ரீதியிலும் குடும்ப மட்டங்களில் குற்றவுணர்வு அற்றுப்போதல் கவலை குறைதல்; திருப்தி ஏற்படுதல்; உணர்ச்சி வெளிப்பாடு நிகழுதல் என்பவற்றுடன் நிம்மதி ஆறுதல்; மற்றவர்களின் ஆதரவு அங்கீகாரம் ஏற்கப்பாடு புரிந்துணர்வு கரிசனை முதலியனவும் கிடைக்கின்றன. அதனால் இவற்றைச் சரிவர சம்பிரதாய முறைகளில் செய்யும் பொழுது அது பிரச்சினையில் இருப்பவர்களுக்கு உதவுகின்றது. உளசமூக சேவையாளர் இவற்றுக்கு இடமளித்து,வழிகாட்டுவது பொருத்தமானது.”

வழிபாட்டின் மூலம் குணமாக்குவோரின் தன்மைகள்

பெரும்பாலான வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் முதியோராகவும், அறிவுடையோராகவும் அனுபவத் தேர்ச்சி கொண்டவர்களாகவும் வழிபாட்டுச் சூழலிலே இருப்பார்கள். அவர்கள் தங்களை நாடி வருகின்ற மக்களோடு எவ்விதம் உரையாடுவது அவர்கள் சொல்லுவதை எவ்விதம் செவிமடுப்பது என்பவற்றைத் தெரிந்து இருப்பார்கள். அத்துடன் அதற்கு ஏற்றாற்போல் மிகவும் நல்ல பொருத்தமான ஆலோசனைகள், கருத்துகள் விளக்கங்களைக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக சடங்காசாரங்கள் ஆனது வழிபாட்டின் மூலம் குணமாக்குவோரின் துணை கொண்டு உளவளத்துணை குற்றவுணர்வு கவலை போன்றவற்றையும் ஓர் இறப்பின் பின்னர் அனுபவிக்கும் இழவிரக்கம் அல்லது ஒரு மனதைத் தாக்கும் சம்பவங்களின் பின் ஏற்படும் கசப்பான உணர்வுச் சிக்கல்கள் போன்றவற்றையும் குறைக்கிறது அல்லது முற்றாக அகற்றி விடுகிறது.

தனி மனிதர்கள் தமது குடும்பப் பிணக்குகள் போன்ற இக்கட்டான சில சமயங்களில் மிகவும் குழப்பமான நிலையில் காணப்பட்டு பல பாரிய கெடுவிளைவுகளுக்கு ஆளானவர்களாக, ஆளாகத் தயாரானவர்களாகக் காணப்படுவர். அவ்வேளை பாரம்பரிய உளவளத்துணையாளர்கள், குழப்பமான நிலையில் இருக்கும் மனிதர்கட்கும், அயலவர்களுக்கும் இந்த நிலைமைகளை விளங்கிக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், சீராக்கவும் உதவி செய்வார்கள். ஆகவேதான் மக்கள் பாரம்பரிய குணமாக்கல் உதவியாளரை நம்புவதோடு தமது அந்தரங்கமான, தனிப்பட்ட விடயங்களைக் கூட அவர்களிடம் மிக இலகுவாக வெளியிடக் கூடியவர்களாகவும், அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு மதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். “மக்களுக்கு உளவளத்துணை அளிப்பதில் பாரம்பரிய குணமாக்குவோரை ஈடுபடுத்துவது நன்மை பயக்கும். பாரம்பரிய பகுதியின் நன்மைகளில் ஒன்று என்னவெனில், குணமாக்குவோருக்கும் மக்களுக்குமிடையே உளசமூகப் பிரச்சினைகள் பற்றிப் பெரும்பாலும் நல்ல புரிந்துணர்வு இருக்கும். குறிப்பாக மக்கள் ஒன்றை ஆழமாக நம்பும் போது, உளரீதியாக அவர்கள் நன்மை அடைகிறார்கள்.”

“18 வயதுடைய மாணவன் பிரதிஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்போது உயர்தரம் படித்துக் கொண்டிருந்தார். உயர்தரப் பரீட்சைக்கு சில மாதங்களே இருக்கும் போது அவருடைய நடத்தைகளில் மாற்றம் வருகின்றது. அவர் திடீர் திடீரென மயக்கம் போட்டு விழுகின்றார். அப்போது அவருடைய முகத்தோற்றம் மாறி வாயினால் நுரை வருகின்றது. மயக்கம் தெளிந்த பின்பும் சில வினாடிகளுக்கு அவர் மாறாட்டமாகக் கதைக்கின்றார். இவ்வாறு அடிக்கடி நடக்க குடும்பத்தார் பயந்து விடுகின்றனர். குடும்பத்துள்ளும், அயல் பகுதியிலும் இவருக்கு நன்றாகப் படிப்பதினால் படிப்பைக் கெடுக்க சூனியம் செய்து விட்டனர் என கதைக்கின்றார்கள். குடும்பத்தினர் இவரின் நிலைமையினால் பதறிப்போகின்றனர். அவரின் நண்பர், ஏனைய உறவுகளின் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் தொடர்பினை மறுத்து விடுகின்றனர். பிரதிஸ் தனிமைப்படுத்தப்படுகின்றார். ஒரு நாள் படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு அந்த நோயானது வருகின்றது. அவர் தனது பற்களினால் நாக்கைக் கடித்து நாக்கு காயமாகின்றது. இவ்வாறு பல நாட்கள் நடக்கின்றது.


ஒரு நாள் உறவினர்கள் அவரை ஒரு வழிபாட்டுத் தளத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு காணப்படும் குணமாக்குபவர் நாகத்தினை தன்னுள் உருக்கொள்ளப் பண்ணி அதன் மூலம் குணமாக்கலைப் புரிவோராகக் காணப்படுகின்றார். அவர் உறவினர்களின் மூலம் பிரதிஸ் இந் நிலைமையை அறிந்து கொள்கின்றார். பிரதிஸ் கொண்டு செல்லப் பட்டதும் குறித்த குணமாக்குபவர் உருவேறி சில நடைமுறைகளைச் செய்து பிரதிஸின் நாக்கிலே தனது நாக்கினால் மருந்தைத் தடவுகின்றார். மக்கள் கூட்டம் பரவசத்தால் அரோகரா சொல்கின்றது. அன்று மாலையே பிரதிஸின் நாக்கினுடைய காயம் அசறு பிடிக்க ஆரம்பிக்கின்றது. மறுநாள் பிரதிஸ் வழிபாட்டுத் தளத்திற்கு அழைத்து செல்லப் படுகின்றார். வழிபாட்டுப் பூசைகள் நடந்து கொண்டிருக்கும் போது பிரதிஸுற்கு வழமையாக வருவது போல் அந்நோய் அறிகுறி வருகின்றது. அனைத்து நடவடிக்கையினையும் நன்கு அவதானித்த குணமாக்குபவர் இனிமேல் இவர் இங்கு வரத்தேவையில்லை .இவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறிவிடுகின்றார். பிரதிஸ்ஸை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கின்றனர். அவருக்கு வலிப்பு நோய் இருப்பது நோய்ப் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. சில நாட்கள் பின் பிரதிஸ் குணமடைந்து உயர்தரம் எழுதி பல்கலைக்குத் தெரிவாகின்றார்.”

பல உளசமூகப் பிரச்சினைகளைக் கையாளுவதில் பாரம்பரிய வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் ஆற்றல் பெற்றவர்களாக விளங்குகின்றார்கள். பிரச்சினைகள் உள்ளவர்கள் அவற்றிற்கு தீர்வுகளைத் தேடும்போதுஇ குணமாக்கக் கூடியவர்களை நாடுவதோடு, அந்தப் பிரச்சினைகளை உண்டாக்கிய காரணிகளைக் கண்டறியவும் முயலுவர். வழிபாட்டின் ஊடாக குணமாக்குவோர் இவற்றிக்கும் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தமது உளச்சிக்கல் நிலைமைகளுக்கான காரணிகளை அகற்றவோ, கையாளவோ துணைபுரிவார்கள் என்றும் நம்புகிறார்கள். ஆகவே மக்கள் தமது உளவிடுபடு நிலைமைக்கு அர்த்தம் காணவும், பரிகாரம் பெறவும் பலவித உதவிகளை நாடுவர். அவர்களின் நம்பிக்கைகள், வசதிகள், பொருளாதாரம், சமூக நிலை மற்றும் படிப்பறிவு மற்றவர்களின் ஆலோசனை அனுபவத் தேர்ச்சி போன்றவற்றின் அடிப்படையிலே பெயர் பெற்றஇ புகழ் பெற்ற உதவக்கூடியவர்களைத் தேடிப்போவார்கள். இவ்வாறானவர்களினை இனங்கண்டு அவர்களின் நிலைமைகளினை நன்கறிந்து உதவி செய்வோராக வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் காணப்படுகின்றார்கள். இதற்கு மேலே கூறப்படுள்ள பாதிக்கப்பட்டு குணமானவரின் அனுபவப் பகிர்வு சான்றாகும்.

தேவை நிறைவேறல் வழிபாட்டு முறைகள்
(மறைமுக குணமாக்கல் தன்மைகள்)

வழிபாட்டுச் சடங்குகளிலே இவ்வாறான வழிபாட்டு நடைமுறைகளும் உண்டு. அதாவது மேலே நாம் பார்த்தது தனி மனித உள்மன உளச்சிக்கல்களினை வழிபாடுகளின் மூலம் குணமாக்கிக் கொள்வது பற்றியதாகும். அது போலவே இங்கு குறிப்பிட்ட சமயத்தினை அல்லது வழிபாட்டு முறைகளினைப் பின்பற்றுவோர் அவர் தம் வழிபாட்டுச் சடங்கு நடவடிக்கைகளின் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் மறைமுக குணமாக்கல் நிலைமைகள் பற்றிப் பார்க்கலாம். அதாவது மக்கள் தமது ஊர்கள்,குழுக்கள் சார்ந்து பொதுவாக வேண்டுகின்ற தேவைகளான மழை வேண்டல், கடும் வெப்பம் தணிய குளிர்த்திச் சடங்கு, கும்பத் திருவிழா, பாண்டவர் வனவாசம், சூரன் போர், வேட்டைத் திருவிழா, கொம்புமுறி விளையாட்டு முதலிய வழிபாட்டுச் சடங்காசாரங்களின் மூலமும் குணமாக்கல் தன்மையானது மக்களின் பொதுவகையான பிரச்சினைகளில் இருந்து விடுபட வழிவகுக்கின்றது எனலாம். மழை வேண்டலுக்காகவே மாரி, காளி, கண்ணகி போன்ற தெய்வங்களுக்கு மக்கள் திருவிழாச் சடங்குகளினைச் செய்வதையும் காணமுடிகின்றது. இவ்வாறு மேலே சொல்லப்பட்டது போன்று மக்கள் தம் பொதுவான தேவைகளினை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு செய்கின்ற வழிபாட்டுச் சடங்குகளிலும் குணமாக்கல் தன்மைகளானது மறைமுகமாகக் காணப்படுகின்றதே உண்மை எனலாம்.

தொடரும்…

கமலநாதன் பத்திநாதன்

வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி I
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி II
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி III
வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல்- பகுதி IV